Wednesday, May 13, 2015

அமுதன் ஆர்.பி. : விருதாளர் வாழ்க்கை குறிப்பு



அமுதன் ஆர்.பி.

ஆவணப்பட இயக்குநர், ஊடகக் களப்பணியாளர்;

வயது 43; சொந்த ஊர்: பழையூர்பட்டி (மேலூர் அருகில்), மதுரை மாவட்டம்.

மதுரை மற்றும் சென்னையில் மறுபக்கம் எனும் அமைப்பின் மூலமாக ஆவணப்படங்கள் எடுப்பது, அவற்றைத் திரையிடுவது, திரைப்படவிழாக்கள், பயிற்சிப் பட்டறைகள், வகுப்புகள் நடத்துவது ஆகிய வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

அப்பா ராமலிங்கம் ஒரு விவசாயி. நல்ல படிப்பாளி. பொது வேலைகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்த்க்கொண்டவர்.  முதலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்.  பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்த போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்  உறுப்பினர். கட்சி வேலைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தவர். அவர் கொடுத்த அரசியல் அடித்தளமே அமுதனின் ஆவணப்பட வேலைகளை பிற்காலத்தில் தீர்மானித்தது. அப்பா இப்போது உயிரோடு இல்லை.

அம்மா புஷ்பம் குடும்பத்தலைவி. மதுரையில் இருக்கிறார். அம்மாவுடன் சிறிய வயதில் பார்த்த எம்.ஜி.ஆர் படங்களே அமுதனுக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவை. அம்மாவுடன் வெள்ளலூர் டெண்ட் கொட்டகையில் பார்த்த படகோட்டி, அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப்பிள்ளை, அன்பே வா ஆகிய படங்களே ஆரம்ப சினிமாப் பாடங்கள்.


கல்வி:

மதுரையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் படிப்பு .

1992-1994ல் எம்.. வளர்ச்சி தொடர்பியல் (டெவலப்மெண்ட் கம்யூனிகேசன்ஸ்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் .

1994-1996ல் டில்லியில் ஆவணப்படதயாரிப்புப் பயிற்சி .

ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள்.

மனைவி தாட்சா திரைப்பட மற்றும் விளம்பரத்துறையில் உடை அலங்காரக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார்.  இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.

ஆவணப்படங்கள்:

அமுதன் இதுவரை 19 படங்கள் எடுத்திருக்கிறார். அவற்றில் குறுகிய நேர மற்றும் முழுநீள ஆவணப்படங்கள், இசைப் படங்கள்  ஆகியன அடங்கும்.

 குடிநீர் மாவியாவால் மதுரையில் வெட்டிக்கொல்லப்பட்ட மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினர் லீலாவதியைப் பற்றி அமுதன் தயாரித்து இயக்கிய முதல் ஆவணப்படம் 1997ல் வெளிவந்தது.

1998ல்  குண்டுப்பட்டியில் காவல்துறை அத்துமீறல் பற்றி எடுத்த "தீவிரவாதிகள்" என்கிற படமும், 2003ல் கையால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளி மாரியம்மாள் பற்றி எடுத்த  "பீ" என்கிற படமும், 2006ல்  தலித் கிறிஸ்தவர்கள் பற்றி எடுத்த "செருப்பு" என்கிற படமும் 2012ல் கூடன்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் பற்றி எடுத்த  "கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 3: கூடன்குளம்" என்கிற படமும்  அமுதன் ஆர்.பி, இயக்கிய படங்களில் அதிகக் கவனம் பெற்றவை.

அமுதன் மேலும் மயானத்தொழிலாளர்கள், மரண தண்டனை எதிர்ப்பு, கல்பாக்கம், மணவாளக்குறிச்சி, கொடைக்கானலில் மெர்குரி பாதிப்பு, திருமங்கலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம், நெடுஞ்சாலை விரிவாக்கம், தஞ்சை விவசாயிகளின் பட்டினிச்சாவு என்று பல்வேறு சமூக, அரசியல் தலைப்புக்களில் இதுவரை ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.

மதுரை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்படவிழா:

1998ல் பிரதமர் வாஜ்பாய் நடத்திய  பொக்ரான் அணு குண்டு சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை நண்பர்கள் சுந்தர், லோகு, பாபு, மற்றும் கேரளாவைச் சேர்ந்த மறைந்த ஆவணப்பட இயக்குநர் சரத் சந்திரன்  ஆகியோர் உதவியுடன்  தொடங்கப்பட்ட மதுரை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்படவிழாவை இதுவரை 17 ஆண்டுகளா, தொடர்ந்து ஒவ்வொரு டிசம்பர் 6 முதல் 10 வரை (5 நாட்கள்) பேரா முரளி, யதார்த்தா ராஜன், பாபு, பர்வதவர்த்தினி, முத்துக்கிருஷ்ணன் போன்ற  நண்பர்கள், ஆவணப்பட ஆர்வலர்கள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் மதுரையில் இருக்கும் கல்லூரிகளில் ஆதரவுடன் மதுரையில் அமுதன் நடத்தி வருகிறார்.

மேலும் சென்னை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்படவிழா, சென்னை மாதாந்தர திரையிடல், மதுரை மாதாந்தர திரையிடல், பல்வேறு தலைப்புகளில் சிறிய திரைப்படவிழாக்கள், ஆவணப்படத் தயாரிப்புப் பயிற்சி ஆகிய வேலைகளில் அமுதன் ஆர்.பி. தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தற்போது அமுதன்,  கோலார் தங்கவயல் சுரங்கத் தொழிலாளர்கள் பற்றிய புதிய ஆவணப்படத்திற்கான ஆய்வுப்பணியில் இருக்கிறார்.


தொடர்புக்கு:

86952 79353; 99406 42044




No comments:

Post a Comment